
தைப்பே – மே-23 – தைவானில் பற்களை சுத்தம் செய்யும் சிகிச்சையின் போது வலி தாங்காத ஆடவர், பெண் பல் மருத்துவரின் முகத்தில் குத்தி இரத்தக் காயத்தை ஏற்படுத்தியுள்ளார்.
ஒரு கட்டத்தில் ‘பொறுமையிழந்து’ கத்திய Zhou எனும் அவ்வாடவர், மருத்துவரை திட்டியதோடு, நாற்காலியிலிருந்து எழுந்து அவரை முகத்தில் குத்தினார். அடிவாங்கிய மருத்துவர் தப்பியோட, அவரை வெளியில் சேவை முகப்பிடம் வரை துரத்திச் சென்று Zhou சரமாரியாகத் தாக்கினார்.
இதனால் அங்கிருந்த பொருட்கள் சிதறி விழுந்ததோடு, ஆவணங்களிலும் தரையிலும் மருத்துவரின் இரத்தம் சிந்தியது. அங்கிருந்தவர்கள் Zhou-வை சமாதானப்படுத்த முயன்றனர்; ஆனாலும் கோபம் அடங்காததால் எவ்வளவோ தடுத்தும் குத்துவதை அவர் நிறுத்தவில்லை.
“நான் தான் வலியில் துடித்தேனே, உன்னால் மெதுவாக வலிக்காமல் செய்ய முடியாதா?” எனக் கத்திக் கொண்டே அவர் அப்பெண்ணைத் தாக்கும் வீடியோக்கள் வைரலாகியுள்ளன.
போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட, Zhoud கிளினிக்கிலிருந்து ஓட்டம் பிடித்தார்; எனினும் பின்னர் அவராக போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். குத்து வாங்கிய பல் மருத்துவருக்கு முகம் வீங்கி, மூக்கில் இரத்தக் கசிவு ஏற்பட்டு, இடது கண் கிட்டத்தட்ட குருடாகும் அளவுக்குச் சென்று விட்டது.
இதனால் அவருக்கு அறுவை சிகிச்சையும் தேவைப்பட்டுள்ளது. எனினும், இது வெறும் பல் சிகிச்சையால் நடந்த சம்பவம் அல்ல; இருவருக்கும் பழைய கடன் பகை உண்டு என கிசுகிசுக்கப்படுகிறது.