![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-14-Jun-2024-01-34-PM-1883.jpg)
புத்ராஜெயா, ஜூன்-14, இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானிய முறையின் கீழ் பட்டியலிடப்பட்ட பள்ளிப் பேருந்து நடத்துநர்கள், பேருந்துக் கட்டணத்தை உயர்த்தினால் நிச்சயம் நடவடிக்கைப் பாயும் என பிரதமர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டீசல் உதவித் தொகை கிடைத்தும் கட்டணத்தை உயர்த்தினால், உரிமம் ரத்தாகும் என பொது போக்குவரத்து நடத்துனர்களை டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பகிரங்கமாக எச்சரித்தார்.
அரசாங்கம் ஒருபோதும் ஏழைகளிடம் சுரண்டாது என உத்தரவாதம் அளித்த பிரதமர், இலக்கு வைக்கப்பட்ட மானியங்களிலிருந்து கிடைக்கும் சேமிப்பு, 10 பில்லியன் ரிங்கிட் நிதியை உட்படுத்திய STR எனப்படும் ரஹ்மா ரொக்க உதவி மூலம் மக்களுக்கே அது திரும்ப போய் சேருவதை உறுதிச் செய்ய முடியும் என்றார்.
இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியத்தின் படி திங்கிட்கிழமை முதல் டீசல் விலை 50 விழுக்காட்டுக்கும் மேல் உயர்வுக் கண்டிருப்பதால், பள்ளிப் பேருந்துக் கட்டணங்களும் உயர்வு காணும் சாத்தியம் குறித்து கேட்ட போது டத்தோ ஸ்ரீ அன்வார் அவ்வாறு கூறினார்.
இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம் தீபகற்ப மலேசியாவில் அமுலுக்கு வந்திருப்பதை ஒரு காரணமாக வைத்து விலையேற்றத்தில் ஈடுபட வேண்டாம் என, விரைவுப் பேருந்து நடத்துனர்களும் பள்ளிப் பேருந்து நிறுவனங்களும் அறிவுறுத்தப்பட்டுவதாக, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக்கும் முன்னதாக நினைவூட்டல் விடுத்திருந்தார்.
SKDS எனப்படும் மானிய விலையிலான டீசல் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் விரைவுப் பேருந்துகளுக்கும் பள்ளிப் பேருந்துகளுக்கும் டீசல் மானியம் தொடர்ந்து வழங்கப்படுவதை அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.