
ஜெனிவா, ஜூன்-4 – உலகம் முழுவதும் 1.6 மில்லியன் மக்கள் பாதுகாப்பற்ற உணவுகளால் தினமும் நோய்வாய்ப்படுகின்றனர்.
உலக சுகாதார நிறுவனமான WHO இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
எனவே, அறிவியல் அடிப்படையிலான கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் மூலம் உணவுப் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கான உலகளாவிய முயற்சிகளை அதிகரிக்க WHO அழைப்பு விடுத்தது.
“உணவுப் பாதுகாப்பு என்பது உலகளாவிய பொறுப்பு” என சனிக்கிழமை உலக உணவுப் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா சபையின் செய்தியாளர் சந்திப்பில் WHO-வின் ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையின் விஞ்ஞானி சைமன் மோரேஸ் ரஸ்ல் (Simone Moraes Raszl) கூறினார்.
” பாதுகாப்பாக இல்லாவிட்டால், அது உணவே அல்ல” என்பதை புரிந்துகொள்ள வேண்டுமென்றும் அவர் நினைவுறுத்தினார்.
“இந்த நோய் தடுக்கக்கூடியது, அதைத் தடுப்பதற்கான அறிவியல் ஏற்கனவே உள்ளது; நமக்குத் தேவையாதெல்லாம் ஒருங்கிணைந்த, ஆதார அடிப்படையிலான மற்றும் உள்ளடக்கிய நடவடிக்கை” என்றார் அவர்.
எனவே அரசாங்கங்கள் அறிவியல் அடிப்படையிலான விதிமுறைகள் மற்றும் வலுவான தரவு அமைப்புகளில் முதலீடு செய்ய வேண்டும்; உணவு வணிகங்கள் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்து வெளிப்படைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்; கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்;
அதே சமயம் பயனீட்டாளர்களும் விழிப்புடன் இருப்பதோடு வீட்டிலேயே பாதுகாப்பான உணவு கையாளுதலைப் பயிற்சி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.