
கோலாலம்பூர், நவம்பர் 18-Shah Alam Line என்றும் அழைக்கப்படும் LRT 3 இலகு இரயில் திட்டம் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி சேவையைத் தொடங்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.
“fault-free run” அதாவது எந்தவொரு குறையுமில்லாத சோதனையோட்டம் உட்பட அனைத்து அமைப்புகளும் தரநிலைகளுக்கு ஏற்ப செயல்படுகிறதா என்பதை கண்டறிய ஏதுவாக, தற்போது அது இறுதிக் கட்ட பரிசோதனையில் உள்ளது.
இந்தக் கடைசிக் கட்ட பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை பரிசோதனைகள் வெற்றியளிக்கும் பட்சத்தில், டிசம்பர் 31-ஆம் தேதி LRT 3 வெள்ளோட்டம் காணும் என, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் மக்களவையில் கூறினார்.
இதற்காக Rapid Rail நிறுவனம் இரயில் இயக்கம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் ஆதரவு பிரிவுகளுக்கு ஏற்கனவே 956 பணியாளர்களை நியமித்துள்ளது.
ஒருவேளை இறுதி சோதனைகள் வெற்றியளிக்கா விட்டால் தேதி மேலும் தாமதமடையலாம் என்றார் அவர்.
மற்றொரு நிலவரத்தில், வெள்ளிக்கிழமை KLIA 1 முனையத்தில் கன மழையைத் தொடர்ந்து கூரையிலிருந்து நீர் கொட்டிய சம்பவம் தொடர்பில், சம்பந்தப்பட்ட குத்தகையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க MAHB நிறுவனம் உத்தரவிடப்பட்டுள்ளது.
SOP நடைமுறைகளைப் பின்பற்றாத குத்தகையாளரின் தவறு மன்னிக்க முடியாத ஒன்றெனக் கூறிய அந்தோனி லோக், அச்சம்பவம் நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சொன்னார்.
KLIA-வில் நீரூற்று போல் மழை நீர் கொட்டிய அச்சம்பவம், சமூக ஊடகங்களில் முன்னதாக பெரும் கேலிக்கு ஆளானது.



