
அலோர் ஸ்டார், ஏப்ரல்-22- 2 மாணவிகள் கொடுத்த பாலியல் தொல்லை புகார் காரணமாக கெடா, அலோர் ஸ்டாரில் உள்ள தனியார் பள்ளியின் ஆண் ஆசிரியர் கைதாகியுள்ளார்.
34 வயது அவ்வாடவர் சனிக்கிழமை கைதானதை போலீஸ் உறுதிப்படுத்தியதாக, Keat Hua இடைநிலைப் பள்ளியின் மேலாளர் வாரியச் செயலாளர் கூறினார்.
பாலியல் தொல்லைத் தொடர்பில் ஒரு முன்னாள் மாணவியும் ஒரு இன்னாள் மாணவியும் புகார் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, அவ்விவகாரம் குறித்து உள் விசாரணை நடத்த, பள்ளி அளவிலும் சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.
விசாரணை முடியும் வரை அவ்வாசிரியர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டு, பள்ளி வளாகத்திற்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் மேலும் மன அழுத்தத்திற்கு ஆளாவதைத் தவிர்க்க அந்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக பள்ளி நிர்வாகம் கூறியது.
போலீஸ் சார்பில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகவில்லை.