
ஜோர்ஜ்டவுன், மார்ச்-28 – பினாங்கில் சீன சுடுகாட்டில் ஒழுங்கீனத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கள்ளக் காதல் ஜோடி, தங்களுக்கு விதிக்கப்பட்ட ஒரு வருட சிறைத்தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளனர்.
58 வயது எம். ஜெகதீசன் மற்றும் 37 வயது ஹலிலா அபு பாக்காருக்கு நேற்று முன்தினம் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் அத்தண்டனை மிகக் கடுமையானது எனக் கூறி, இருவரின் வழக்கறிஞர் நரன் சிங் நேற்று ஜோர்ஜ்டவுன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டை தாக்கல் செய்தார்.
வழங்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை அதிகப்படியான ஒன்றா என்பதை உயர் நீதிமன்றம் ஆராய்ந்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார் அவர்.
Batu Gantong-கில் நிகழ்ந்த இச்சம்பவம் முன்னதாக சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவால் பெரும் கவனம் பெற்றது.
69 வயது முதியவர் ஒருவர் போலீஸில் புகார் செய்ததை அடுத்து, அந்த கள்ளக் காதல் ஜோடி பிடிபட்டது.
இப்போது, உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை நிலைநிறுத்துமா அல்லது தண்டனையை குறைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



