
கோலாலம்பூர், ஜனவரி-30,
பினாங்கை பெரிக்காத்தான் கைப்பற்றும் முயற்சிக்குத் தலைமையேற்க வேண்டியது தாங்களே, மாறாக கெராக்கான் கட்சி அல்ல என, மலேசிய இந்திய மக்கள் கட்சியான MIPP திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
பினாங்கு கெராக்கானின் கோட்டையாக இருந்தது உண்மை தான்; நவீன பினாங்கின் வளர்ச்சியில் கெராக்கான் தலைவர்களின் பங்கும் அளப்பரியது; அதை மதிக்கிறோம்.
ஆனால் இன்று நிலைமை வேறு; களமும் வேறு என MIPP தலைவர் பி.புனிதன் கூறினார்.
சீன வாக்காளர்கள் DAP-கான தங்களின் விசுவாசத்தைத் தொடருவதால், வெற்றிக்கான மாற்று வழியைத் தேடுவது காலத்தின் கட்டாயம்.
ஆக, இந்திய – மலாய் வாக்காளர்களைக் குறி வைத்து தேர்தலைச் சந்திப்பது தான் நமக்கிருக்கும் சிறந்த தேர்வாகும்.
அம்முயற்சிக்கு பெரிக்காத்தானின் நான்காவது உறுப்புக் கட்சியான MIPP தலைமையேற்பது பலன் தரும் என்றார் அவர்.
MIPP-யின் அத்திட்டத்தை கெராக்கான் தலைவர் டோமினிக் லாவ் முன்னதாக விமர்சனம் செய்திருந்தது தொடர்பில், புனிதன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
புதுவரவான MIPP-யை விட பினாங்கில் கெராக்கானுக்கே அனுபவம் அதிகம்; தேர்தல் கேந்திரமும் வலுவாக உள்ளது.
எனவே, பினாங்கில் பெரிக்காத்தானுக்கு MIPP தலைமையேற்பதென்பது சாத்தியமில்லாத ஒன்று என டோமினிக் கூறியிருந்தார்.
கடந்த சில நாட்களாகவே பெரிக்காத்தான் கட்சிகளிடையே இது குறித்து அறிக்கைப் போர் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பெர்சாத்து கட்சியில் மலாய்க்காரர் அல்லாதோருக்கான பெர்செக்குத்துப் பிரிவின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஆர். ஸ்ரீ சஞ்சீவனும் முன்னதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.
புனிதனின் பேச்சு ஒரு பரிந்துரை மட்டுமே; முடிவு எதுவானாலும் அதனை பெரிக்காத்தான் தலைமை தான் இறுதிச் செய்யுமென சுட்டிக் காட்டியிருந்தார்.