
ஜியோர்ஜ்டவுன், அக்டோபர்-11 – பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் (PHEB) கல்விக் குழு வரலாற்றில் முதன் முறையாகச் செபராங் பிறை மாவட்டத்தைச் சேர்ந்த 6 தமிழ்ப்பள்ளிகளுக்குக் கல்வி சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது.
பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி, புக்கிட் மெர்தாஜாம் தமிழ்ப்பள்ளி, பெராய் (Perai) தமிழ்ப்பள்ளி, அல்மா தமிழ்ப்பள்ளி, லாடாங் ஜூரு தமிழ்ப்பள்ளி, பிறைத் (Prye) தமிழ்ப்பள்ளி ஆகிய 6 பள்ளிகளைச் சேர்ந்த 142 மாணவர்களும் 20 ஆசிரியர்களும் அதில் பங்கேற்றனர்.
அந்த ஒரு நாள் கல்விச் சுற்றுலாவைப் பினாங்கு மாநில இரண்டாவது துணை முதலமைச்சர் ஜக்டீப் சிங் டியோ (Jagdeep Singh Deo) இன்று தொடக்கி வைத்தார்.
இந்து அறப்பணி வாரியத்தின் தலைவரும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான RSN ராயர், அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவரான செனட்டர் Dr லிங்கேஷ்வரன்,
பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் உள்ளிட்ட பிரமுகர்களும் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பூஜாங் பள்ளத்தாக்கு-பண்டைய கெடாவின் அதிசயம் (Bujang Valley – The Wonder That Was Ancient Kedah) என்ற நூலின் ஆசிரியரான டத்தோ நடராஜாவின் விளக்கமளிப்புடன் கல்விச் சுற்றுலா தொடங்கியது.
சம்பந்தப்பட்ட பள்ளிகளின் நூலகங்களில் வைப்பதற்காக, அறப்பணி வாரியம் தனது சொந்த செலவில் அந்நூல்களை வாங்கி தமிழ்ப்பள்ளிகளுக்கு அன்பளிப்பாகவும் வழங்கியது.
மாணவர்கள் Candi-ளைப் பார்வையிடுவதற்காக பூஜாங் பள்ளத்தாக்கு பொருட்காட்சி சாலைக்கும், சுங்கை பத்து தொல்பொருள் ஆராய்ச்சித் தளத்திற்கும் பயணம் தொடர்ந்தது.
பின்னர் அலோர் ஸ்டார் நெல் பொருட்காட்சி சாலைக்கும், ராஜேந்திர சோழனின் சிலையைப் பார்ப்பதற்காக ஸ்ரீ லிங்கேஷ்வரர் ஆலயத்திற்கும் பயணம் தொடரும்.