
சைபர்ஜெயா, ஜூன்-1 – நாட்டின் புகையிலை எதிர்ப்பு ஆர்வலரான என்.வி.சுப்பாராவ், ‘புகையிலைக் கட்டுப்பாட்டு முன்மாதிரி’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
புகைபிடித்தல் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 30 ஆண்டுகளாக அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.
சைபர்ஜெயாவில் நேற்று நடைபெற்ற உலக புகையிலை எதிர்ப்பு தின கொண்டாட்டத்தில் சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்லி அஹ்மாட் அவ்விருதை வழங்கினார்.
பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்விப் பிரிவு அதிகாரியுமான சுப்பாராவ், புகையிலை, வேப்பிங், ஷிஷா மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருட்களின் பயன்பாட்டினால் எற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வை, குறிப்பாக இளைஞர்களிடையே அதிகரிக்க, இந்த விருது மேலும் உந்துதலை அளித்துள்ளதாகக் கூறினார்.
நாடு முழுவதும் உள்ள தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் 25,000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை தனது முயற்சிகள் சென்றடைந்துள்ளதாக அவர் கூறினார்.
“என்னுடைய வகுப்புகளில் கலந்து கொண்ட பிறகு புகைபிடிப்பதை நிறுத்திவிட்டதாகச் சில மாணவர்கள் என்னிடம் திரும்பி வந்துள்ளனர், அது எனக்குப் பெருமையான சாதனை” என்று சுப்பாராவ் கூறினார்.
இதனிடையே, புகைபிடித்தல் மற்றும் வேப்பிங் பொருட்களுக்கு முழு தடை விதிக்குமாறு CAP தலைவர் மொஹிதீன் அப்துல் காதர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
அப்பழக்கம், கடுமையான பொது சுகாதார அபாயங்களை ஏற்படுத்துவதோடு போதைப்பொருள் சார்புநிலைக்கான சாத்தியக்கூறுகளை அதிகரிப்பதையும் அவர் மேற்கோள் காட்டினார்.
இப்பொருட்கள் எளிதில் அணுகக்கூடியவை, குறிப்பாக இணையத்தில் ஒரே கிளிக்கில், பயனர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று பொய் சொல்லி அவற்றை வாங்கி விட முடிவதை மொஹிதீன் சுட்டிக் காட்டினார்ர