
சிரம்பான், மார்ச் 20 – சிரம்பான், ஜாலான் துன் டாக்டர் இஸ்மாயிலில் உள்ள சிறிய தொழில்மயப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான போதைப் பொருள் ஆய்வுக் கூடத்தை நெகிரி செம்பிலான் போலீசார் முறியடித்தனர்.
இதனைத் தொடர்ந்து சுமார்
40 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அகமட் ஷாபிர் முகமட் யூசோப் ( Dzaffir Mohd Yussof ) தெரிவித்தார்.
நெகிரி செம்பிலானில் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 63 இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதன் மூலம் சிறு தொழில்துறை பகுதியில் நடத்தப்பட்ட மிகப்பெரிய சோதனை இதுவாகும் என அவர் வருணித்தார்.
மேலும் போதைப் பொருட்களை வைப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த தங்கும் வசதியைக் கொண்ட மூன்று வீடுகள் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த வியாழன் மாலை மணி 6.15 அளவில் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறையின் போலீஸ் குழு சிரம்பானில் ஒரு தொழிற்சாலை மற்றும் மூன்று வீடுகளில் நான்கு சோதனைகளை நடத்தியதாக ஷாபிர் கூறினார்.
ஜாலான் துன் டாக்டர் இஸ்மாயில் சிறிய தொழில்மயப் பகுதியில் நடத்தப்பட்ட முதல் சோதைனை நடவடிக்கையில் உள்நாட்டை சேர்ந்த 52 வயது நபர் கைது செய்யப்பட்டான் .
அந்த நபர் போதைப் பொருள் தயாரிக்கும் கும்பலின் பராமரிப்பாளராகவும் உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளான் .
335.65 கிரேம் கெத்தாமின் (ketamin) போதை மாத்திரைகள்.
2,058 கிரேம் ஹெரொய்ன் (heroin) பவுடர் மற்றும் போதைப் பொருட்கள் தயாரிப்பதற்காகன பல்வேறு வகையான 63 இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து இதர மூன்று வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளிலும் பல்வேறு வகையான போதைப் பொருட்கள் பெரிய அளவில் பறிமுதல் செய்யப்பட்டது.
அங்குள் சிறு தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் போதைப் பொருட்கள் கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் மற்றும் நாட்டின் தென் பகுதியிலுள்ள சந்தைகளுக்கு விநியோகிக்கப்பட்டு வந்ததாக ஷாபிர் கூறினார்.
கைது செய்யப்பட்ட சந்தேகப் பேர்வழி 1952ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளதோடு இக்கும்பலைச் சேர்ந்த இதர சந்தேக நபர்களையும் போலீசார் தேடி வருவதாக அவர் தெரிவித்தார்.