
ஜோர்ஜ்டவுன், ஜூன்-7 – பினாங்கில் ‘மடானி வீட்டுரிமைத் திட்டத்தின்’ கீழ் இந்து முஸ்லீம்களுக்கு 5 விழுக்காடு விலைக் கழிவு வழங்கும் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அச்சலுகை தகுதி வாய்ந்த அனைத்து பினாங்கு மக்களுக்கும் விரிவுப்படுத்தப்பட வேண்டும்.
மாநில ம.இ.கா தலைவர் ஜே. தினகரன் அவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இது, வீடு வாங்குவோரின் சுமையைக் குறைக்கும் முயற்சி என்றாலும், தனிப்பட்ட ஒரு தரப்புக்கோ அல்லது குறிப்பிட்ட வீடமைப்புத் திட்டங்களுக்கோ மட்டும் ஒதுக்கப்படக் கூடாது என அவர் கேட்டுக் கொண்டார்.
சவால்மிக்க நடப்பு பொருளாதாரச் சூழலில், பினாங்கு முழுவதும் அனைத்து மக்களும் சொந்த வீடுகளைக் கொண்டிருக்க நியாயமான – சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
சொந்தமாக வீடு வாங்குவது என்பது இன்னமும் ஏராளமான மலேசியர்களுக்கு பெரும் சவாலாக இருப்பதால், இதே பேன்ற விலைக் கழிவுச் சலுகைத் திட்டத்தை தேசிய அளவிலும் செயல்படுத்துமாறு மத்திய அரசாங்கத்திற்கும் அவர் பரிந்துரைத்தார்.
இது, B40, M40 வர்கத்தினர் குறிப்பாக இளம் குடும்பங்களுக்கு பேருதவியாக இருக்குமென்றார் அவர்.
எனவே, அனைவரையும் உள்ளடக்குதல், சமத்துவம் மற்றும் அதிக தாக்கத்தை உறுதிச் செய்வதற்காக பினாங்கு மாநில அரசு இந்தக் கொள்கையின் நோக்கத்தை மதிப்பாய்வு செய்து, அனைவருக்கும் விரிவுபடுத்தும் என தினகரன் எதிர்பார்ப்பை வெளியிட்டார்.
பினாங்கில் சொந்த வீடு வாங்க விரும்பும் இந்து முஸ்லீம்களுக்கு ஜூன் 1 முதல் அடுத்தாண்டு மே 31 வரை ஓராண்டுக்கு இந்த 5 விழுக்காடு விலைக் கழிவு வழங்கப்படுவதாக, வீடமைப்புத் துறைக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தரராஜூ முன்னதாக அறிவித்திருந்தார்.