
லண்டன், நவம்பர்-5 – இந்துஜா குழுமத்தின் தலைவரும், இங்கிலாந்தின் மிகப் பெரிய பணக்கார தொழிலதிபருமான இந்திய-பிரிட்டிஷ் கோடீஸ்வரர் கோபிசாந்த் பி. இந்துஜா, உடல்நலக்குறைவால் லண்டன் மருத்துவமனையில் காலமானார்.
அவருக்கு வயது 85.
வணிக வட்டாரங்களில் “ஜிபி” என அன்போடு அழைக்கப்படும் கோபிசாந்த், தனது குடும்பத்தின் வர்த்தக நிறுவனத்தை, வாகனம், எரிசக்தி, வங்கி, சொத்துடைமை, சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய உலகளாவிய கூட்டு நிறுவனமாக மாற்றுவதற்கு உந்து சக்தியாக இருந்தவர் ஆவார்.
அவரது தலைமையின் கீழ், இந்துஜா குழுமம் இவ்வாண்டு Sunday Times பணக்காரர் பட்டியலில் £35.3 பில்லியன் சொத்துக்களுடன் முதலிடத்தைப் பிடித்தது
இருந்தும், புகழையும் ஊடக வெளிச்சத்தையும் விரும்பாத ஓர் அபூர்வமான பணக்காரக் குடும்பம் இதுவாகும்.
1940-ஆம் ஆண்டு அப்போதைய இந்தியாவின் சிந்து மாநிலத்தில் பிறந்த ஜிபி, 1950-களில் குடும்ப வணிகத்தில் இணைந்து, அதன் அனைத்துலக விரிவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார்.
தனது மூத்த சகோதரர் ஸ்ரீ சாந்த் இந்துஜாவின் மரணத்தைத் தொடர்ந்து 2023-ஆம் ஆண்டில் குழுமத்தின் தலைவராக கோபிசாந்த் பொறுப்பேற்றார்.
அவரது மறைவு உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க வணிகக் குடும்பங்களில் ஒன்றின் சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது.
மனைவி சுனிதா, மகன்கள் சஞ்சய் மற்றும் தீரஜ், மகள் ரீட்டா ஆகியோரை அவர் விட்டுச் சென்றுள்ளார்.



