
கோலாலம்பூர், ஜூன் 10 – பிறந்தது முதல் ஒருவகை இருதய நோய்க்கு உள்ளாகியிருந்த சிலாங்கூர் , பத்துமலையைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஹர்சீத்தா சாய் செல்வ கணபதி ( Harsheeta Sai ) அமெரிக்காவில் போஸ்டனில் உள்ள மருத்துவமனையில் இறந்தார். சுங்கை பூலோ, சரஸ்வதி தமிழ்ப் பள்ளியின் மூன்றாம் வகுப்பு மாணவியான ஹர்சீத்தாவிற்கு பிறந்தது முதல் ஆக்சிஜன் அளவு 70 விழுக்காடு முதல் 75விழுக்காடு மட்டுமே செயல்பட்டு வந்தது. எனவே அச்சிறுமிக்கு அமெரிக்காவின் குழந்தைகள் மருத்துவமனையான போஸ்டன் (Boston) மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்க வேண்டும் என தேசிய இருதய சிகிசை நிலையமான IJN பரிந்துரை செய்திருந்தது. அந்த சிகிச்சைக்கு மருத்துவ செலவுக்கு 350,000 அமெரிக்க டாலர் செலவாகும் என தெரிவிக்கப்பட்டதால் அந்த தொகையை திரட்டுவது பெரும் சவாலாக இருந்தாலும் அவரது குடும்பத்தினர் ஒரு மாதத்திற்குள் 350,000 டாலருக்கு இணையாக 15 லட்சம் ரிங்கிட்டை திரட்டினர். அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் அந்த சிறுமியை சிகிச்சைக்காக அவரது பெற்றோர் போஸ்டனுக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு தேவையான மருத்துவ பரிசோதனை அனைத்தும் மேற்கொள்ளப்பட்ட சுமார் ஒரு மாதத்திற்குப்பின் ஹர்சீத்தா சாய்க்கு இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. எனினும் அவரது உடல் பலவீனமாக இருந்ததோடு மூளை மற்றும் வயிற்றில் இரத்தக் கசிவு ஏற்பட்டது. இதனால் கடந்த இரண்டு வார காலமாக ஹர்சீத்தா சாய் சுயநினைவை இழந்ததோடு சுவாசக் கருவியின் துணையுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலைமையில் அச்சிறுமி நேற்று இறந்ததாக ஹர்சீத்தா சாயின் உறவினர் ஒருவர் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார். தற்போது அமெரிக்காவிலிருந்து ஹர்சீத்தா சாயின் உடலை பத்துமலையிலுள்ள இல்லத்திற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை அமெரிக்காவிலுள்ள மலேசிய தூதரகத்தின் உதவியோடு அவரது பெற்றோர் செய்து வருகின்றனர்.