
புக்கிட் மெர்தாஜாம், ஏப்ரல் 23- குறுகிய காலத்தில் லாபகரமான வருமானத்தை உறுதியளிக்கும் போலி முதலீட்டால் தனது 3 லட்சத்து 79 ஆயிரத்து 200 ரிங்கிட் சேமிப்புப்பணம் காணாமல் போனதையடுத்து வங்கி ஊழியர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 11ஆம் திகதி அலிஸ்ஸா என்பவர் பாதிக்கப்பட்ட பெண்ணைப் புலனத்தில் தொடர்புக் கொண்டு, XGI Horizon Pro என்னும் விண்ணப்பத்தில் முதலீடு செய்ய தூண்டியதாக செபராங் பெராய் தெங்கா மாவட்ட காவல்துறைத் தலைவர், அசிஸ்டன் கமிஸ்னர் ஹெல்மி அரிஸ் தெரிவித்தார்.
ஆசை வார்த்தைகளில் மதிமயங்கி பாதிக்கப்பட்டவர் RM10,000 தொகையை முதலீடு செய்தபோது அதன் இலாபம் 1.6 மில்லியனைக் காட்டியது. இருந்தாலும் மேலும் சில தொகைகளைச் செலுத்தினால் மட்டுமே அந்த இலாப பணத்தை எடுக்க முடியுமென்று அந்த ஏமாற்றுப் பேர்வழி கூறியுள்ளான்.
இவ்வாறு அவர் சிறிது சிறிதாக மொத்தம் 3 லட்சத்து 79 ஆயிரத்து 200 ரிங்கிட் தொகையை பரிமாற்றம் செய்த பிறகுதான், தான் ஏமாற்றப்பட்டதை அவர்தம் கணவரின் வாயிலாக தெரிந்துக் கொண்டிருக்கிறார்.
இதனிடையே, பாதிக்கப்பட்டவர் நேற்று காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது