
செப்பாங், ஜூலை-31- KLIA 2 விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் சிக்குவதைத் தவிர்க்க, புதிதாக வந்திறங்கியப் பயணிகள் போல் ஆள்மாறாட்டம் செய்யும் யுக்தி அம்பலமாகியுள்ளது.
KLIA 2-வில் குடிநுழைவு பரிசோதனையைத் தவிர்க்கும் வெளிநாட்டினரின் புதிய யுக்தி இதுவென, AKPS எனப்படும் எல்லைக் கட்டுபாடு மற்றுப் பாதுகாப்பு நிறுவனம் கூறியது.
நேற்று முன்தினம் 270 வெளிநாட்டவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது; அவர்களில் 13 பேருக்கு நுழைவு மறுக்கப்பட்டது. அவர்கள், ஒரு பெண் உள்ளிட்ட 9 இந்தியப் பிரஜைகளும், 4 பாகிஸ்தானிய ஆடவர்களும் ஆவர்.
குடிநுழைவு செயல்பாட்டு அலுவலகத்தில் மேல் பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட இந்தியப் பிரஜைகள், ஏதோ அப்போது தான் வந்திறங்கியப் பயணிகள் போல் ஆள்மாறாட்டம் செய்ய முயன்றனர்.
அதாவது, transit பகுதியில் சட்டென உடைகளை மாற்றிக் கொண்டு குடிநுழைவு சோதனைக்கான வரிசையில் அவர்கள் மீண்டும் நுழைய முயன்றனர்.
எனினும், அவர்களின் ஜம்பம் பலிக்கவில்லை. AKPS அணுக்கமாகக் கண்காணித்து, அவர்கள் குடிநுழைவு முகப்பிடத்தை கடந்துசெல்வதற்குள் கைதுச் செய்தது.
இனி, transit பகுதிகளில் ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்பட்டு, CCTV கண்காணிப்பும் வலுப்படுத்தப்படுமென AKPS அறிக்கை வாயிலாகக் கூறியது.