
கோலாலம்பூர், மார்ச்-14 – எதிர்க்கட்சித் கூட்டணியான பெரிகாத்தான் நேஷனல் (PN), நாடாளுமன்றத்தின் புதிய எதிர்க்கட்சித் தலைவரை இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கும்.
இன்று செராஸில் உள்ள கெராக்கான் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டத்தில் அதற்கு இணக்கம் காணப்பட்டதாக, அதன் புதியத் தலைவர் டத்தோ ஸ்ரீ Ahmad Samsuri Mokhtar கூறினார்.
ஏற்கனவே பேசியபடி எதிர்கட்சித் தலைவர் பாஸ் கட்சியை சேர்ந்தவராகத் தான் இருப்பார் என்றும் அவர் சொன்னார்.
நடப்பு எதிர்கட்சித் தலைவராக உள்ள டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடின், பெர்சாத்து கட்சியிலிருந்தே நீக்கப்பட்டதை அடுத்து இந்த எதிர்கட்சித் தலைவர் மாற்றம் நிகழ்கிறது.
துணைத் தலைவராக தான் ஶ்ரீ முஹிடின் யாசினோடு டத்தோ டோமினிக் லாவ், புனிதன் மற்றும் துவான் ஹஜி இப்ராஹிம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வேளையில், PN தலைவர் பதவியிலிருந்து தான் ஸ்ரீ முஹிடின் யாசின் ஜனவரி 1-ம் தேதி விலகிய அதே நாளில், அதன் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகிய டத்தோ ஸ்ரீ அஸ்மின் அலிக்கு பதிலாக, பாஸ் கட்சியின் டத்தோ ஸ்ரீ தாக்கியுடின் ஹசான் நியமிக்கப்பட்டுள்ளார்.
PN தகவல் பிரிவுத் தலைவராக பாஸ் கட்சியின் தான் ஸ்ரீ அனுவார் மூசாவும், தேர்தல் இயக்குநராக பெர்சாத்து உதவித் தலைவர் ரட்சி ஜிடினும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுநாள் வரை தேர்தல் இயக்குநராக இருந்த கெடா மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சனுசி மொஹமட் நோர், பெரிக்காத்தானின் புதியப் பொருளாளராக நியமனம் பெற்றுள்ளார்.
துணை பொது செயலாளராக டத்தோ ஶ்ரீ அஸ்மின் அலி, டத்தோ சிவக்குமார் கிறிஸ்ணன் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய உட்பூசல்களுக்கு பிறகு புதியத் தலைமையின் கீழ் பெரிக்காத்தான் மேற்கொண்டுள்ள மறுசீரமைப்பாக இது அமைகிறது.



