
கோலாலம்பூர், அக் 13 – 16 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின் கூட்டரசு அரசாங்கத்தை பெரிக்காத்தான் நேசனல் கைப்பற்றினால் ஒரு ஆண்டிற்கு குடும்ப உதவியாக 6,000 ரிங்கிட்வரை அதாவது மாதத்திற்கு 500 ரிங்கிட் வழங்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் ஹம்சா ஜைனுடின் (Hamzah Zainudin) தெரிவித்தார்.
பெரிக்காத்தான் நேசனல் பரிவு உதவித் திட்டத்தின் கீழ் தேவைப்படும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்வி இலவசமாக வழங்கப்படும் என்றும் ஹம்சா (Hamzah) கோடிக் காட்டினார்.
கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சமர்ப்பித்த 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்படி நாட்டின் நிதி நிலைமை பெரிக்காத்தான் நேசனலின் பரிவு உதவித் திட்டத்தை அமல்படுத்துவதற்கான ஆற்றலை கொண்டுள்ளது.
பெரிக்காத்தான நேசனல் அதிகாரத்தில் இருந்தபோது 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து 2021 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம்வரை இந்த உதவித் திட்டத்தை முதல் முறையாக பெரிக்காத்தான் அறிமுகப்படுத்தியதாக நாடாளுமன்றத்தில் விநியோக மசோதா மீதான விவாதத்தில் கலந்துகொண்டபோது பெரிக்காத்தான் துணைத் தலைவருமான ஹம்சா (Hamzah) தெரிவித்தார்.