
வட்டிகன் சிட்டி, மே-8 – கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புதியப் போப்பாண்டவரைத் தேர்வு செய்ய வத்திகன் சிட்டியில் நேற்று கார்டினல்களின் கூட்டம் தொடங்கியது.
எனினும் தேவாலயத்திலிருந்து கருப்பு புகையே வெளியானதால், புதியப் போப்பாண்டவர் இன்னும் தேர்வாகவில்லை என்பது உறுதியானது.
வத்திகனில் உள்ள அப்போஸ்தலிக் அரண்மனையில் 15-ஆம் நூற்றாண்டின் தேவாலயத்தில் 133 கத்தோலிக்க கார்டினல்கள் ஒன்று கூடி புதிய போப்பை தேர்ந்தெடுக்கிறார்கள்.
மூன்றில் 2 பங்கு அல்லது 89 வாக்குகளைப் பெறுபவர் புதியப் போப்பாக தேர்ந்தெடுக்கப்படுவார்.
இரகசியமாக நடக்கும் இக்கூட்டத்தில் ஒரு சிறப்பு அடுப்பில் வாக்கு சீட்டுகளை எரிப்பதன் மூலம், போப்பாண்டவர் தேர்வு செய்யப்பட்டு உலகிற்கு முடிவு அறிவிக்கப்படுகிறது.
போப்பாண்டவர் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் புகைபோக்கி கருப்பு புகையை வெளியிடும்.
அதுவே புதிய போப் தேர்வு செய்யப்பட்டு விட்டால், வெள்ளை புகை வெளியாகும்.
செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் சுற்றுப் பயணிகள் மற்றும் கத்தோலிக்க பக்தர்கள் கூட்டத்திற்கு மத்தியில் சிஸ்டைன் தேவாலயத்தின் மேல் பொருத்தப்பட்டுள்ள புகைப்போக்கியின் மூலம் இப்புகை வெளியாகிறது.
ஆக முதல் நாள் கூட்டத்தில் புதியப் போப்பாண்டவர் தேர்வு செய்யப்படாததால், இன்று கார்டினல்கள் கூட்டத்தைத் தொடருவர்.
போப்பாண்டவராக இருந்த ஃபிரான்சிஸ் அண்மையில் காலமானதை அடுத்து, புதியப் போப் தேர்வு செய்யப்படுகிறார்