
புத்ராஜெயா, ஜனவரி-7 – AwAS எனப்படும் புதியத் தானியங்கி விழிப்புணர்வு பாதுகாப்பு முறை கேமராக்கள் மூலம் புள்ளிக்குப் புள்ளி என்ற வேகக் கண்காணிப்பு இன்னும் சோதனைக்கு விடப்படவில்லை.
பார்க்கப் போனால் இம்மாதம் பரீட்சார்த்தமாக அது பயன்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும்.
ஆனால் இந்த முன்னோடித் திட்டத்தை அமுலுக்குக் கொண்டு வர காலக்கெடு எதுவும் விதிக்கப்படவில்லை என, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெளிவுப்படுத்தினார்.
எனினும், அம்முறை எப்போது சோதனைக்கு விடப்படும் என்பது கண்டிப்பாக பின்னர் அறிவிக்கப்படுமென்றார் அவர்.
இந்த point-to-point முறை, காராக் மற்றும் PLUS நெடுஞ்சாலைகளில் சோதனைக்கு விடப்படும் என, சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ ஏற்கனவே அறிவித்துள்ளது.
காராக் நெடுஞ்சாலையில் கெந்திங் செம்பா சுரங்கப்பாதைலிருந்து கோம்பாக் ஓய்வெடுக்கும் பகுதி வரையிலும், PLUS நெடுஞ்சாலையில் செனாவாங் டோல் சாவடி தொடங்கி அலோர் காஜா டோல் சாவடி வரையிலும் அச்சோதனை நடத்தப்படும்.
விபத்துகள் அதிகம் நிகழும், PLUS நெடுஞ்சாலை, ஈப்போவில் உள்ள மேனோரா சுரங்கப் பாதை போன்ற இடங்களில் மேம்படுத்தப்பட்ட அந்த AwAS கேமராக்களைப் பொருத்த JPJ இலக்கு வைத்துள்ளது.
இப்புதியக் கண்காணிப்பு முறையின் கீழ், உதாரணத்திற்கு, A புள்ளியிலிருந்து B புள்ளி வரையிலான பயணத்திற்கு, ஓட்டுநர் எடுத்துக் கொண்ட நேரம் கணக்கிடப்படும்; எதிர்பார்க்கப்பட்டதை விட விரைவாகவே பயணம் நிறைவடைந்தால், அவர்கள் வேகமாகச் சென்றுள்ளார்கள் எனக் கருதி பெனால்டி விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.