
பூச்சோங், ஜூலை-25- பூச்சோங் பெர்மாயில் அண்மையில் ஓர் ஆடவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் விசாரணைக்காகக் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
18 மற்றும் 19 வயதுக்கு இடைப்பட்ட அம்மூவரும் பூச்சோங்கிலும் உலு சிலாங்கூரிலும் கைதானதாக, சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் வான் அஸ்லான் வான் மாமாட் (Wan Azlan Wan Mamat) தெரிவித்தார்.
அவர்களிடமிருந்து சில ஆடைகளும் கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.அவர்களைத் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்ற ஆணையும் பெறப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
இதையடுத்து, ஜூன் 22 அன்று நடந்த கடத்தல் தொடர்பில் இதுவரை நால்வர் கைதாகியுள்ளனர். பெர்சியாரான் பூச்சோங் பெர்மாயில் (Persiaran Puchong Permai) அன்று மாலை ஆடவர் கும்பலால் ஓர் இளைஞர் வலுக்கட்டாயமாக லாரியில் தூக்கிப் போடப்பட்டு கடத்திச் செல்லப்பட்டார்.
அதனை நேரில் கண்ட சாட்சி கொடுத்தத் தகவலின் பேரில், முதல் சந்தேக நபர் மறுநாளே கைதானார். அந்நபர் கைதான போது, கடத்தப்பட்ட ஆடவரும் மீட்கப்பட்டார்.
முன்னதாக, அவ்வாடவர் கடத்தப்பட்ட போது அவர் அக்கும்பலால் சரமாரியகாத் தாக்கப்பட்ட 40 வினாடி வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.