
பெக்கான், மே-18- பஹாங், பெக்கானில் 60 கிலோ கிராம் எடையிலான ஆண் சூரியக் கரடி வீட்டுக்குள் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தாமான் தானா பூத்தேவில் நேற்று அதிகாலை அச்சம்பவம் நிகழ்ந்தது.
அப்பகுதி வாழ் மக்களில் ஒருவர் வளர்த்து வருவதாக நம்பப்படும் அக்கரடி சம்பவத்தின் போது கூண்டிலிருந்து வெளியேறி சுற்றித் திரிந்துள்ளது.
விடியற்காலை 4.30 மணிக்கு அவ்வீட்டினுள் புகுந்த கரடி, இரைத் தேடும் முயற்சியில் அங்கிருந்த பல பொருட்களை சேதப்படுத்தியது.
பின்னர் அதுவாக சுவரேறி வெளியேறி விட்டது.
இந்நிலையில் வீட்டில் கரடி புகுந்ததாகக் கூறி காலை 8.30 மணிக்கு பெக்கான் பொது தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடம் வந்து சேர்ந்த வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN-னின் ஊழியர்கள், அதே வீட்டின் முன்புறம் அக்கரடி நடமாடுவதைக் கண்டனர்.
துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி, கரடியை குவாந்தான் PERHILITAN மையத்திற்கு அவர்கள் கொண்டுச் சென்றனர்.