
ஈப்போ, மே 2- ஈப்போ மற்றும் கம்பாரில் உள்ள பல வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசியதற்காக இரு ஆடவர்கள் மீது கூட்டாக குற்றஞ்சாட்டப்பட்டது. கடிதப் பட்டுவாடா விநியோகிப்பாளரான 37 வயதுடைய கோக் வான் லியாங் (Kok Wan Liang ) மற்றும், தைவானைச் சேர்ந்த 26 வயதுடைய லின் ஜியா ஹீ ( Lin Jia He ) ஆகியோர் தீ வைத்து சேதப்படுத்தியதற்காக தண்டனைச் சட்டத்தின் 436 வது பிரிவின் கீழ் ஐந்து குற்றச்சாட்டுக்கள் கொண்டுவரப்பட்டன.
கம்பார், தாமான் பண்டார் பாருவிலுள்ள ஒரு வீட்டில் சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஏப்ரல் 10ஆம்தேதி விடியற்காலை மணி 4.20 அளவில் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசியதாக நீதிபதி அய்னுல் ஷாரின் முகமட் முன்னிலையில் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அந்த இருவரும் அதே தினம் அதிகாலை மணி 2.50 அளவில் கம்போங் Kuala Kuang கில் இதே போன்று மற்றொரு குற்றத்தை புரிந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
வேலையில்லாமல் இருக்கும் லின், மார்ச் 25 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு முன்பு Panorama Lapangan Perdanaவில் உள்ள ஒரு வீட்டில் மேலும் ஒரு குற்றச்சாட்டை புரிந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டார்.
மேலும் 2015ஆம் ஆண்டின் பிராணிகள் சமூகநல சட்டத்தின் பிரிவு
29 (1) (e) யின் கீழ் 11 வயதுடைய சாக்லேட் நிறத்திலான ரோட் விலர் நாயை Panorama Lapangan Perdana வில் தேவையில்லாமல் கொடுமைப்படுத்தியதாகவும் அவ்விருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது. குற்றச்சாட்டை மறுத்து லின் விசாரணை கோரிய வேளையில் கோக் அனைத்து குற்றச்சாட்டையும் ஒப்புக்கொண்டார். லின்னுக்கு 15,000 ரிங்கிட்டும் கோக்கிற்கு 10,000 ரிங்கிட்டும் ஜாமின் அனுமதிக்கப்பட்டது.