
லண்டன், ஏப்ரல்-12-உலகப் பிரசித்திப் பெற்ற இங்கிலாந்தின் Oxford பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற காமன்வெல்த் இளைஞர் மேம்பாட்டு உச்சநிலை மாநாட்டில், மலேசிய இளைஞர் ஒருவர் நாட்டை பிரதிநிதித்து பங்கேற்று பெருமை சேர்த்துள்ளார்.
UUM எனப்படும் வட மலேசியப் பல்கலைக் கழகத்தின் சட்டத் துறை மாணவர் ஷர்வின் தங்கராஜே அவராவார்.
பேராக், ஆயர் தாவார், கம்போங் துன் சம்பந்தனைச் சேர்ந்த ஷர்வின், ஏப்ரல் 9 முதல் 11 வரை நடைபெற்ற இந்த அனைத்துலக மாநாட்டில் கலந்து கொண்ட ஒரே மலேசிய பிரதிநிதியாக திகழ்ந்தார்.
காமன்வெல்த் இளைஞர் மன்ற ஏற்பாட்டில் நடைபெற்ற இம்மாநாட்டில், இளைஞர் வேலைவாய்ப்பு, பொருளாதார நிலைத்தன்மை, தொழில் முனைவோர் வாய்ப்புகள் மற்றும் கிராமப்புற சமூகங்களின் குரலை உயர்த்துவதன் அவசியம் உள்ளிட்ட முக்கிய அம்சங்களை அவர் முன்வைத்தார்.
குறிப்பாக, கிராமங்கள் மற்றும் தோட்டப் புறங்களில் வாழும் இளைஞர்களின் சவால்களை இவர் உலகளாவிய மேடையில் வெளிப்படுத்தினார்.
இந்த அரிய வாய்ப்பை வழங்கிய இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சுக்கும், UUM நிர்வாகத்துக்கும் நன்றித் தெரிவித்துக் கொண்ட ஷர்வின், மலேசிய இந்திய இளைஞர்களிடம் இதை கொண்டுசேர்க்கும் வணக்கம் மலேசியாவுக்கும் நன்றி பாராட்டினார்.
மலேசிய இந்திய இளைஞராக, நாட்டின் குரலை அனைத்துலக அளவில் ஷர்வின் எடுத்துச் சென்றது நமக்கெல்லாம் பெருமை தானே…



