
கங்கார், மே 14 – ஆகஸ்ட் 1 முதல் பெர்லிஸ் அரசு, மாநிலத்தில் எந்த வகையான வேப்பிங் அல்லது மின் சிகரெட்டுகள் விற்பனைக்கு தடை செய்துள்ளது. மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினருக்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தலாக மாறி வரும் மின் சிகரெட் ஆபத்துகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
எனவே, மின் சிகரெட் வர்த்தகர்கள் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய பொருட்கள் அல்லது சாதனங்களுடன் தொடர்பில்லாத புதிய வணிகங்களைத் தேடத் தயாராக இருக்க வேண்டும் என்று பெர்லீஸ் மந்திரி புசார், முகமட் சுக்ரி ரம்லி ( Mohd Shukri Ramli ) நினைவுறுத்தினார். வர்த்தகர்களின் மின் சிகரெட் உரிமம் புதுப்பிக்கப்படாது, ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் உடனடியாக ரத்து செய்யப்படும்.
பெர்லிஸ் முழுவதும் மின் சிகரெட் விற்பனை செய்யும் இடங்கள் அதிகம் இல்லை என்பதோடு 50 கடைகளுக்குக் குறைவாகவே உள்ளன என்பது புரிந்து கொள்ளப்படுவதாக இன்று நடைபெற்ற மாநில ஆட்சிக்குழு கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டில் பெர்லிஸ் மாநில ஃபத்வா குழுவால் மின் சிகரெட்டுகள் பயன்பாடு ஏற்கனவே தடைசெய்யப்பட்டுள்ளது என்றார். இருப்பினும், இந்த முறை, அதன் விற்பனையை தடை செய்ய நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். மின் சிகரெட்டை முற்றிலுமாக கட்டுப்படுத்துவது கடினம் என்றாலும், குறைந்தபட்சம் எங்கள் நடவடிக்கைகள் இளைஞர்கள் மின் சிகரெட் பயன்படுத்துவதை தடுகக முடியும் என முகமட் சுக்ரி கூறினார்