
கங்கார், மார்ச்-16-தனது பேரக்குழந்தையின் உயிரியல் தாயின் அடையாளத்தை மறைக்கத் தவறான தகவலை வழங்கியதற்காக, 67 வயது பெண்ணுக்குச் செசன்ஸ் நீதிமன்றம் 1,500 ரிங்கிட் அபராதம் விதித்தது.
நீதிபதி நூருல் நதாஷா ரிசால்(Nurul Natasha Rizal ) முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பிறகு, டான் கிம் லீன் என்ற அந்த பெண் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டத்தின் பிரிவு 36(1)(b) யின் கீழ் வேண்டுமென்றே தவறான தகவல்களை வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
2018 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி பெர்லிஸ் நகர்ப்புற மாற்ற மையத்தில் உள்ள தேசிய பதிவுத் துறை முகப்பிடத்தில் டான் இந்த குற்றத்தைப் புரிந்ததாகக் குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவருக்கு 1,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதோடு இதனைச் செலுத்தத் தவறினால் மூன்று மாதம் சிறைத்தண்டனையை அனுபவிக்கும்படி நீதிபதி நூருல் நதாஷா தீர்ப்பளித்தார்.



