
பொந்தியான், ஜோகூர், மே 16- நேற்று மாலை, லாட்டரி சீட்டில் 200,000 ரிங்கிட் வென்றதாக கூறி, அங்காடி வியாபாரியான பெண் ஒருவரிடம் 8,000 ரிங்கிட்டை மோசடி செய்த இந்தோனேசிய பெண்ணை, காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
பெனூட்டில் இருக்கும் பேரங்காடியொன்றில், அந்த இந்தோனேசியப் பெண், தான் வெற்றி பெற்ற ‘toto’ லாட்டரி சீட்டை மீட்க, பாதிக்கப்பட்டவரிடம் உதவி கேட்டதாக நம்பப்படுகின்றது.
லாட்டரி பணத்தை மீட்டப் பிறகு, தன்னுடைய பணம் நிச்சயம் கிடைத்து விடும் எனும் நம்பிக்கையில், அந்த பெண் வியாபாரியும் 8,000 ரிங்கிட் மதிப்புள்ள பணத்தையும் நகையையும் சந்தேக நபரகளான இந்தோனேசியப் பெண்ணிடமும் உடன் வந்த உள்ளூர் ஆடவரிடமும் ஒப்படைத்ததாக பொந்தியான் மாவட்ட காவல்துறைத் தலைவர், முகமது ஷோஃபி தையிப் (Mohammad Shofee Tayib ) கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அப்பெண், தான் அவ்விருவரால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
மேலும், சந்தேக நபர்கள் இதேபோன்று பலரையும் ஏமாற்றிய தகவல் முதல் கட்ட விசாரணையில் வெளிவந்துள்ளதோடு, இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.