
கோலாலாம்பூர், மார்ச்-26-உலகப் பொருளாதார அழுத்தங்களால் நாட்டிலுள்ள இந்திய முஸ்லீம் உணவகங்களும் கடுமையான செலவின உயர்வை எதிர்கொள்கின்றன.
PRESMA எனப்படும் மலேசிய முஸ்லீம் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் Mosin Abdul Razak அதனைத் தெரிவித்தார்.
கோழி, காய்கறிகள், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள், பொட்டலமிடுதல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை 10% முதல் 30% வரை உயர்ந்துள்ளது.
கடந்தாண்டு மத்தியிலிருந்தே இந்நிலை தொடருவதாக அவர் சொன்னார்.
என்ற போதிலும், பெரும்பாலான மாமாக் உணவகங்கள், வாடிக்கையாளர்களுக்கு சுமை ஏற்படாமல், செலவுகளை தாங்களே சமாளித்து வருகின்றன என்றார் அவர்.
ஆனால், இதே நிலை நீடித்தால், சிறிய அளவிலான விலை உயர்வுகள் தவிர்க்க முடியாதவை என அவர் சொன்னார்.
எனவே, அரசாங்கம் மூலப்பொருட்களின் விலையை நிலைப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், உணவகத் துறைக்கு ஊக்குவிப்புகளை வழங்க வேண்டும் என்றும் PRESMA சார்பில் அவர் வலியுறுத்தினார்.



