
கிள்ளான், மார்ச் 30- கிள்ளான் Jalan Barat சாலையில் நேற்று மதுபோதையுடன் வாகன ஓட்டுநர் மோட்டார் சைக்கிளோட்டியை மோதியதில் அவர் இறந்தார்.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர் நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் லிம் ஜிட் ஹூவே ( Lim Jit Huey ) தெரிவித்தார்.
விசாரணைக்கு உதவும் பொருட்டு அந்த வாகன ஓட்டுநரை வியாழக்கிழமைவரை தடுத்து வைக்கும் உத்தரவை மாஜிஸ்திரேட் சித்தி சுபைடா மஹாட் பிறப்பித்தார்.
காலை மணி 11.40 அளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளும் , Honda City மற்றும் Produa Myvi ஆகிய இரு கார்கள் சம்பந்தப்பட்டன.
20 வயது மதிக்கத்தக்க நபர் ஓட்டிச் சென்ற ஹோண்டா சிட்டி கார், ஜாலான் ராயா பாராட் பகுதியிலிருந்து கிள்ளான் நகரை நோக்கி அஜாக்கிரதையாகவும் அதிவேகமாகவும் சென்று கொண்டிருந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
சம்பவ இடத்திற்கு வந்தபோது, ஓட்டுநர் பல வாகனங்களை முந்திச் சென்றதாகவும், பின்னர் எதிர் திசைப் பாதைக்குள் நுழைந்து ஒரு மோட்டார் சைக்கிள் மீது முன்புறமாக மோதியதாகவும் நம்பப்படுகிறது.
இந்த மோதலின் தாக்கத்தால், 30 வயதுக்குட்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி ஒரு பெரோடுவா மைவி காரின் மீது தூக்கி வீசப்பட்டதால் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே மரணம் அடைந்தார்.
Honda City கார் ஓட்டுனர் மது போதையிலும் மற்றும் போதைப் பொருளை பயன்படுத்திய நிலையில் இருந்தது சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதாக Lim Jit Huey தெரிவித்தார்.



