
போர்டிக்சன், மே-5, நெகிரி செம்பிலான், போர்டிக்சனில் சரியாகப் பூட்டப்படாத கார் கதவு திடீரென திறந்துகொண்டதால் தூக்கி வீசப்பட்ட குடும்ப மாது, எண்ணெய் டாங்கி லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜாலான் லுக்குட் – செப்பாங்கின் 26-ஆவது கிலோ மீட்டரில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.20 மணிக்கு அவ்விபத்து நிகழ்ந்தது.
அப்பெண் பயணித்த Myvi ஒரு வளைவைக் கடக்கும் போது காரின் பின்பக்க வலப்புற கதவு திடீரென திறந்துகொண்டது.
இதனால் எதிர்பாதைக்கு தூக்கி வீசப்பட்டவரை, அவ்வழியாக வந்த Volvo இரக எண்ணெய் டாங்கி லாரி மோதித் தள்ளியது.
அதில் தலையில் பலத்த காயமேற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
34 வயது காரோட்டியான அப்பெண்ணின் கணவரும், குழந்தைகளுக்கான பாதுகாப்பு நாற்காலியில் முன்னிருக்கையில் இருந்த அவர்களின் 5 மாதக் கைக்குழந்தையும் காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.
டாங்கி லாரி ஓட்டுநரும் காயமின்றி தப்பினார்.
காரோட்டியிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் உட்கொண்டிருக்கவில்லை என்பது உறுதியானது.
தற்சமயம் விசாரணைக்காக, அந்த டாங்கி லாரியின் dash cam கேமரா பதிவுப் பெறப்பட்டுள்ளது.
இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருக்க, வாகனங்களின் கதவுகள் குறிப்பாக பயணிகளை ஏற்றி செல்லும் போது சரியாகப் பூட்டப்பட்டுள்ளதை உறுதிச் செய்துகொள்ளுமாறு போலீஸ் கேட்டுக் கொண்டது