மில்லியன் கணக்கில் நன்கொடைகளை வசூலித்து கையாடல்; 3 NGO-கள் மீது விரைவில் சட்ட நடவடிக்கை

புத்ராஜெயா, ஜனவரி-10,
பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மில்லியன் கணக்கான ரிங்கிட் நன்கொடைகளை முறைகேடு செய்ததாகக் கூறப்படும் குறைந்தது 3 ‘பிரபல’ அரசு சாரா அமைப்புகள் (NGO) மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
ROS எனப்படும் சங்கப் பதிவிலாகாவிடம் பதிவுப் பெற்ற அறக்கட்டளைகளும் அவற்றிலடங்கும் என, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.
மதம் – மனிதாபிமானம் என்றப் பெயரில் நன்கொடைகளை சேகரித்த இந்த NGO-கள், பணத்தை தனிப்பட்ட கணக்குகளுக்கு மாற்றியுள்ளன.
“மலேசியர்களின் இரக்க குணத்தையும் தாராள மனப்பான்மையையும் பயன்படுத்தி இந்த அரசு சாரா நிறுவனங்கள் “சட்டவிரோத சொத்துக்கள்” மற்றும் செல்வத்தை குவித்துள்ளன”
சம்பந்தப்பட்டவர்கள் விரைவிலேயே நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்படுவர் என்றும் அசாம் பாக்கி கூறினார்.
இவ்வேளையில், இது போன்ற NGO-கள், அறக்கட்டளைகளை சம்பந்தப்பட்ட அமைச்சுகளோ அதிகாரிகளோ தான் கண்காணிக்க வேண்டும்; இது MACC-யின் அன்றாட வேலை அல்ல என்றும் அவர் நினைவுறுத்தினார்.
கடந்தாண்டு மத்தியில், ஒரு அரசு சாரா நிறுவனத்தின் பல தலைவர்களை, அந்த அமைப்புக்குச் சொந்தமான நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறி MACC கைதுச் செய்தது நினைவிருக்கலாம்.
பொது நன்கொடைகளில் சுமார் RM26 மில்லியன் பணத்தை, அதன் தலைவர் உட்பட, அந்த அரசு சாரா நிறுவனத்தின் நிர்வாக உறுப்பினர்கள் கையாடல் செய்ததாகக் கூறப்படுகிறது.



