
கோலாலம்பூர், அக்டோபர்-12,
வரும் தீபாவளி விடுமுறையின் உச்ச நாட்களில் 2.67 மில்லியன் வாகனங்கள் முக்கிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக் கூடுமென,
மலேசிய நெடுஞ்சாலை வாரியமான LLM கணித்துள்ளது.
ஆக அதிகமாக PLUS நெடுஞ்சாலைகளில் 2.2 மில்லியன் வாகனங்கள் பயணிக்கலாம்; கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையை 170,000 வாகனங்களும், கிழக்குக் கரை நெடுஞ்சாலையான LPT 1-ரை 90,000 வாகனங்களும், LPT 2-வை 40,000 வாகனங்களும் பயன்படுத்தக் கூடும்.
மேற்கு கடற்கரை நெடுஞ்சாலையில் 170,000 வாகனங்கள் பயணிக்கக் கூடுமென LLM கூறிற்று.
வரும் வியாழக்கிழமை அக்டோபர் 16-ஆம் தேதியே நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து அதிகரிக்கக் கூடும்; குறிப்பாக வடக்கு, தெற்கு மற்றும் கிழக்குக் கரை நோக்கிச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அன்றைய தேதியிலிருந்து அதிகரிக்கும்.
எனவே, பெருநாள் விடுமுறையில் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் வாகனமோட்டிகளின் பயணம் பாதுகாப்பானதாகவும் வசதியாகவும் இருப்பதை உறுதிச் செய்வதற்குண்டான ஏற்பாடுகளை செய்யுமாறு, நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
அவசரத் தேவைகளுக்கு அல்லாமல் பாதைகளை மூடக் கூடாது, 29 இடங்களில் smart lane பாதைகளைத் திறப்பது, டோல் கட்டண வசூலிப்பு முறையாக இயங்குவதை உறுதிச் செய்தல் ஆகியவையும் அவற்றிலடங்கும் என LLM கூறியது