
சிரம்பான், பிப்ரவரி 3 – சிரம்பான் Palm Mall பகுதியில் உள்ள ஒரு நாசி கண்டார் உணவகத்தில், மீதமிருந்த உணவுகளைக் கழுவி மீண்டும் சமைக்க முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நெகிரி செம்பிலான் மாநில சுகாதாரத் துறை தமது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
நள்ளிரவு 12 மணியளவில், உணவகத்தின் பின்புறத்தில் பணியாளர் ஒருவர் மீதமிருந்த கோழி, ஆட்டிறைச்சி, tauhu உள்ளிட்ட உணவுகளை கழுவி, தனித்தனியாக தட்டுகளில் வைப்பதை ஒருவர் பார்த்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் விவரங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.
அந்த நபர் கூறுகையில், முதலில் உணவக ஊழியர்கள் உண்மையை மறைக்க முயன்றதாகவும், பின்னர் அந்த உணவுகள் மீண்டும் சமைக்கப்படும் என ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார். இது மக்களின் உடல்நலத்திற்கு கடும் ஆபத்தானது என அவர் குற்றம் சாட்டினார்.
இதனிடையே, மாநில சுகாதார இயக்குநர் Dr Zuraida Mohamed, இந்த விவகாரம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
குற்றச்சாட்டுகள் உண்மையென நிரூபிக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், பொதுமக்கள் புகார்களை அதிகாரப்பூர்வ வழிகளின் மூலம் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



