
செம்போர்னா, ஜூன்-10 – சபா, செம்போர்னாவில் உள்ள போஹே டூலாங் தீவு
(Bohey Dulang Island) இன்று முதல் ஜூன் 13 வரை பொது மக்களுக்கு மூடப்படுகிறது.
முதலை அச்சுறுத்தல் தடுப்பு நடவடிக்கைக்கு வழிவிட ஏதுவாக அது மூடப்படுவதாக, சபா பூங்காக்கள் துறை (Sabah Parks) தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியது.
இந்த போஹே டூலாங் தீவு, துன் சக்காரான் கடல் பூங்காவுக்கு உட்பட்ட பிரபல சுற்றுலாத் தலமாகும்.
இங்கு முக்குளிப்பு, snorkeling போன்ற நீர் சார்ந்த நடவடிக்கைகள் சுற்றுப்பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலம்.
இந்நிலையில் அத்தீவில் முதலை நடமாட்டம் இருப்பதைக் காட்டும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.
எனவே இந்த 3 நாட்களில் Sabah Parks, வனவிலங்குத் துறை மற்றும் போலீஸ் இணைந்து முதலை அச்சுறுத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் இறங்குகின்றன.
அது சுமூகமாக நடைபெறவும் பொது மக்களின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாமலிருக்கவும் இந்த மூடல் அவசியமென தெரிவிக்கப்பட்டது.