
புத்ராஜெயா, ஜனவரி-13-தேசியப் போலீஸ் படையின் முன்னாள் தலைவர் தான் ஸ்ரீ மூசா ஹசானுக்கு எதிரான அவதூறு வழக்கில், கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹானா இயோவுக்கு சாதகமாக புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஹானா இயோவை கிறிஸ்தவ மதப் பிரசாரம் மற்றும் அரசியல் நோக்கங்களுடன் இணைத்துப் பேசிய மூசா ஹசானின் கருத்துக்கள் அவதூறாகும் என, நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
எனவே, 2024-ல் ஹானா இயோவின் மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை, கூட்டரசு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதன் விளைவாக, மூசா ஹசான், ஹானா இயோவுக்கு RM250,000 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளார்.
ஹானா இயோ, Becoming Hannah, a Personal Journey, என்ற தலைப்பில் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு சுயசரிதையை வெளியிட்டார்.
அதில், அவர் ஒரு சாதாரண மலேசியப் பெண்ணாக தனது பயணத்தை அவர் விவரித்தார்.
தனது வாழ்க்கை கிறிஸ்தவ நம்பிக்கையின் மூலம் மாற்றப்பட்டு, பின்னர் அரசியலுக்கு இட்டுச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதை வைத்து, மலேசியாவை ஒரு ‘கிறிஸ்தவ நாடாக’ மாற்ற முயற்சிப்பதாக மூசா ஹசான் தம்மை குற்றம் சாட்டியதை அடுத்து, 2020-ல் ஹானா இயோ அவ்வழக்கைத் தொடுத்தார்.



