
மெக்சிகோ, டிசம்பர் 24 – மருத்துவ உதவி செய்வதற்கு அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்ட மெக்சிகோ கடற்படை சிறிய விமானம் ஒன்று, டெக்சாஸ் கால்வெஸ்டன் (Texas Galveston) கடற்கரைக்கு அருகே விபத்துக்குள்ளானதில் இரண்டு வயது குழந்தை உட்பட ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
விமானத்தில் மொத்தம் எட்டு பேர் பயணம் செய்ததில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை இன்னும் காணவில்லையென்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த அந்த 2 வயது குழந்தைக்கு, முன்னதாக உடலில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தது. மெக்சிகோவில் சரியான சிகிச்சை கிடைக்காததால், குழந்தையை அமெரிக்காவுக்கு கொண்டு செல்லும் வழியில் இவ்விபத்து நடந்தது என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில் இந்த விபத்து குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக மெக்சிகோ அதிபர் தெரிவித்துள்ளார். தரை கட்டுப்பாட்டு அமைப்புடன் விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்பதனைக் கண்டறிய, அமெரிக்காவுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.



