
ஜோர்ஜ் டவுன் , ஏப்ரல் – 21 போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மே மற்றும் அக்டோபர் மாதம் நடைபெறும் ஆசியான் உச்சநிலைக் கூட்டடத்தின்போது வீட்டிலேயே PdPR எனப்படும் கற்றல் கற்பித்தல் முறையை அமல்படுத்துவதற்கு கல்வி அமைச்சு தயாராகி வருகிறது. இந்த அமலாக்கத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிகளை தற்போது அடையாளம் காணும் நடவடிக்கையில் கல்வி அமைச்சு ஈடுபட்டு வருவதாக கல்வி அமைச்சர் பட்லினா சீடேக் தெரிவித்தார்ர். PdPR முறை குறித்து பேச்சுக்கள் நடைபெற்று வருவதோடு ஆசியான் நிகழ்ச்சியின்போது இத்திட்டம் சுமூகமாக நடைபெறுவது உறுதிப்படுத்தப்படும் என அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் எந்தவொரு பிரச்னையும் இல்லை. வீட்டிலிருந்தபடியே மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் முறையை முழுமையாக அமல்படுத்தும் கடப்பாட்டை நாங்கள் கொண்டுள்ளோம். கல்வி அமைச்சிற்கிடையே இந்த விவகாரம் குறித்து தீவிரமாக விவாதித்துள்ளோம் என பட்லினா தெரிவித்தார். இன்று டத்தோ ஹாஜி அகமட் படாவி தேசிய இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஜாலுர் கெமிலாங் பேட்ஜை அணிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது அவர் இத்தகவலை வெளியிட்டார். அரசாங்க மற்றும் அரசாங்க உதவிப் பெற்ற அனைத்து பள்ளிகள், மெட்ரிகுலேசன் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் ஆகியவற்றில் ஜாலுர் கெமிலலாங் பேட்ஜை அணியும் நடவடிக்கை இன்று முதல் தொடங்கியுள்ளது.