Latestஇந்தியாஉலகம்மலேசியா

“மோசடி செய்து சன் குழுமத்தைக் கைப்பற்றினார்” – சன் டிவி கலாநிதி மாறனுக்கு நோட்டீஸ் அனுப்பிய தம்பி தயாநிதி மாறன்

சென்னை, ஜூன்-20 – சன் குழுமத்தின் கட்டுப்பாட்டை மோசடி செய்து கைப்பற்றியதாகக் கூறி, அதன் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கலாநிதி மாறனுக்கு, அவரின் தம்பியும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

24,000 கோடி ரூபாய் மதிப்பிலான சன் டிவி குழுமத்தில் வெடித்துள்ள இந்த குடும்பச் சண்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2003-ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய வகையில் பங்கு ஒதுக்கப்பட்டதை, இப்பிரச்னைக்கு மூலக்காரணமாக 58 வயது தயாநிதி குறிப்பிட்டுள்ளார்.

தந்தை முரசொலி மாறன் மரணப் படுக்கையில் இருந்த போது ‘சட்டவிரோத நடவடிக்கையை’ கலாநிதி மாறன் தொடங்கியுள்ளார்; அதாவது 12 லட்சம் ரூபாய் பங்குகள் ‘நம்பிக்கை மோசடி’ செய்யப்பட்டு மாற்றப்பட்டுள்ளன.

இதன் மூலம் சன் குழுமத்தின் 60 விழுக்காட்டு பங்குகள், மற்ற பங்குத்தாரர்களின் ஆலோசனை அல்லது ஒப்புதல் இன்றி கலாநிதியின் பெயருக்கு மாறியுள்ளன.

எனவே, 2003 செப்டம்பருக்கு முன்பிருந்த அசல் ஆவணத்தின் படி, சன் குழுமத்தின் பங்குடைமையை மீண்டும் மாற்ற வேண்டுமெனக் கூறி, கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மற்றும் 6 பேருக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அவ்வகையில் முரசொலி மாறனின் இதர வாரிசுதாரர்கள், மற்றும் மறைந்த தமிழக முன்னாள் முதல் அமைச்சர் மு. கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் ஆகியோர், பழையபடி சொத்துக்களின் உரிமையாளர்களாக்கப்பட வேண்டும்.

தவறினால், சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

இது கலாநிதிக்கு தயாநிதி அனுப்பியுள்ள இரண்டாவது நோட்டீஸாகும்; ஏற்கனவே கடந்தாண்டு அக்டோபரில் முதல் நோட்டீஸ் அனுப்பட்டது.

2003-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை மாறன் குடும்பமும், கருணாநிதியின் குடும்பமும் சன் டிவி குழுமத்தில் சம அளவில் பங்குகளை வைத்திருந்தன.

கருணாநிதி 2011-ல் காலமானார்; அவரின் மகன் மு.க.ஸ்டாலின் தற்போது தமிழகத்தின் முதல் அமைச்சர்.

இந்நிலையில் இவ்விவகாரம் நீதிமன்ற படியேறினால், சன் டிவி குழுமத்தைக் கைப்பற்றுவதில், கலாநிதி மாறன், தனது சொந்தத் தம்பியையும் கருணாநிதி குடும்பத்தையும் எதிர்த்து நிற்க வேண்டும்.

அப்படியொரு சூழ்நிலை அதுவும் அடுத்தாண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் வருவுள்ள நேரத்தில் ஆளுங்கட்சிக்கு இது பாதகமாக அமையலாம்.

தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் தொலைக்காட்சியாக சன் டிவி மிகவும் செல்வாக்குடன் திகழ்வதற்கு, ஆளும் கட்சிக்கு ‘மிகவும் வேண்டப்பட்ட தரப்பாக இருந்ததும், அதன் மூலம் அது பெரும் ‘பயனடைந்ததுமே’ காரணம் என பரவலாகவே கருத்து நிலவுகிறது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!