
புத்ராஜெயா, ஆகஸ்ட்-13- முன்னாள் மத்திய அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லியின் மகனை புத்ராஜெயாவில் இன்று மர்ம நபர்கள் ஊசியால் குத்தித் தாக்கியச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள பேரங்காடி ஒன்றின் கார் நிறுத்துமிடத்தில் இன்று பிற்பகல் 1.45 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்ததை ரஃபிசி உறுதிப்படுத்தினார்.
காரில் ஏறும் போது மகனைப் பிடித்து இழுத்த மர்ம நபர், திடீரென ஊசியால் குத்தினான்.
கருப்பு உடையில், ஹெல்மட் அணிந்து முகத்தை மூடியிருந்த தாக்குதல்காரனும் அவனது கூட்டாளியும் சட்டென அங்கிருந்து தப்பியோடினர்.
காயமடைந்த மகன் சிகிச்சைக்காக உடனடியாக UPM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக ரஃபிசி சொன்னார்.
பரிசோதனையில், அவ்விரு ஆடவர்களும் மோட்டார் சைக்கிளில் ரஃபிசி மானைவியின் காரைப் பின்தொடர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதை வைத்து பார்க்கும் போது, இத்தாக்குதல் நிச்சயம் திட்டமிடப்பட்ட ஒன்றே என்றும், மேற்கொண்டு விவரங்கள் தெரிவிப்பதை போலீஸ் மற்றும் மருத்துவமனைத் தரப்பிடமே விட்டு விடுவதாகவும் கூறினார்.
இத்தனை ஆண்டு கால அரசியல் வாழ்வில் இது போல் தாம் குறிவைக்கப்பட்டு தாக்கப்படுவது இதுவே முதன் முறையென்றும், குறிப்பிட்ட விவகாரங்களில் தாம் உரக்கக் குரல் எழுப்புவதைத் தடுப்பதற்கான முயற்சியே இதுவென்றும் ரஃபிசி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறினார்.