
கோலாலம்பூர், ஜூன்-6 – ஒரே குடையின் கீழ் மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கப் புறப்பட்டுள்ள துன் Dr மகாதீர் மொஹமட்டின் நடவடிக்கையை பாஸ் கட்சி தற்காத்து பேசியுள்ளது.
அரசியல் கட்சிகளின் பெருக்கமே மலாய் சமூகம் பிளவுப்பட்டு கிடப்பதற்கு முக்கியக் காரணம் என, பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ துவான் இப்ராஹிம் துவான் மாட் கூறினார்.
எனவே, மலாய்க்காரர்களை ஒன்றிணைக்க அறிவார்ந்தோர், வர்த்தக பிரமுகர்கள், அரசியல்வாதிகள், மத அறிஞர்கள் உள்ளிட்டோரை அடங்கிய ‘மெகா’ கூட்டணி அவசியமாவதாக அவர் சொன்னார்.
அரசியல் கட்சிகளின் பெருக்கத்தையும் தப்பு சொல்ல முடியாது; காரணம் ஒரு ஜனநாயக நாட்டில் அது அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும்.
எனவே, மலாய் சமூகத்தைச் சேர்ந்த அனைத்து சாராரும் இப்புதிய முயற்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென துவான் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
இது, பெர்சாத்து, பாஸ் கட்சிகளை உள்ளடக்கிய பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் மறு வடிவம் அல்ல; இது வேறு அது வேறு என்றார் அவர்.
முன்னாள் பிரதமரான மகாதீர், அரசாங்கத்தில் ‘மலாய்க்காரர்களின் அதிகாரத்தை மீட்டெடுப்போம்’ எனக் கூறி ‘மலாய்க்காரர்களின் செயலகம்’ (Sekretariat Orang Melayu) என்ற பெயரில் புதிய கூட்டமைப்பை உருவாக்கியுள்ளார்.
அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் மலாய்க்காரர்களின் ‘எதிர்காலத்தைக் காப்பாற்ற’ மலாய்க்காரர்களை ஒரே குடையின் கீழ் ஒன்றிணைப்பதே இம்முயற்சி என அவர் கூறிக் கொண்டார்.
அதில் அம்னோ உறுப்பினர்களும் தாராளமாக வந்திணையலாம் என அவர் அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.