
ஷா ஆலாம், ஜூன்-3 – 2023 சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தலில் தாம் வெற்றிப் பெற்ற சுங்கை துவா சட்டமன்றத் தொகுதியை காலி செய்யப்போவதாக வெளியான தகவலை, மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி மறுத்துள்ளார்.
அது ஒரு கற்பனையான அடிப்படையற்ற தகவல் என, பி.கே.ஆர் உதவித் தலைவருமான அவர் சொன்னார்.
இன்னொருவருக்கு வழி விட்டு தொகுதியை காலி செய்வதென்பது எல்லாரும் நினைப்பது போல் அவ்வளவு சுலபமான காரியமல்ல என்றார் அவர்.
முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஸ்ரீ சாஃவ்ருல் தெங்கு அப்துல் அசிஸ் இடைத்தேர்தலில் போட்டியிட ஏதுவாக, சுங்கை துவா தொகுதியை தாம் காலி செய்யப்போவதாக வெளியான தகவல் குறித்து அமிருடின் கருத்துரைத்தார்.
அம்னோவிலிருந்து விலகி பி.கே.ஆரில் இணையப் போவதாக தெங்கு சாஃவ்ருல் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
இந்நிலையில், புதிய சிலாங்கூர் மந்திரி பெசாராக பதவியேற்க ஏதுவாக, இடைத் தேர்தலில் தெங்கு சாஃவ்ருல் போட்டியிடுவார் என்றும், அவருக்கு பதிலாக மத்திய அமைச்சராக அமிருடின் பொறுப்பேற்பார் என்றும் வதந்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.