
ஜோர்ஜ்டவுன், டிசம்பர்-3 – 86 வயதான மூத்த வழக்கறிஞர் டத்தோ Dr ஜி. ரெத்தினசாமி, மலேசிய அறிவியல் பல்கலைக் கழகமான USM-மின் 63-வது பட்டமளிப்பு விழாவில் PhD பட்டம் பெற்று நம்மையெல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
1959-ஆம் ஆண்டில் ஆண் தாதியராக தனது பயணத்தைத் தொடங்கி இவர், பின்னர் இங்கிலாந்தின் Lincoln’s Inn-ல் சட்டப்படிப்பு முடித்து வழக்கறிஞராக மாறினார்.
1975-ஆம் ஆண்டு பட்டவொர்த்தில் தனது சட்ட நிறுவனத்தைத் தொடங்கிய ரெத்தினசாமி, கடந்த 50 ஆண்டுகளாக சமூகத்திற்கு, குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு, மலிவான அல்லது இலவச சட்ட உதவிகளை வழங்கி வந்துள்ளார்.
அவரின் PhD ஆய்வு, திட்டமிடல் அதிகாரிகள், வீடமைப்புத் திட்ட மேம்பாட்டாளர்கள் மற்றும் வீடமைப்புத் திட்டங்களின் செயல்முறைகள் — குறிப்பாக மக்களுக்கு மலிவான வீடுகளின் செலவு ஆகியவற்றின் தொடர்பை ஆராய்கிறது.
தினமும் உடற்பயிற்சி செய்வது, வீட்டருகே சாலைகளில் சுற்றித் திரியும் பூனைகளைப் பராமரிப்பது என சுறுசுறுப்பாக இருப்பதே, 86 வயதிலும் தான் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கான இரகசியம் என ரெத்தினசாமி சொல்கிறார்.
அவரின் சாதனை, வாழ்நாள் முழுவதும் கற்றல் என்ற மதிப்பை வெளிப்படுத்தி, வயது என்பது கல்விக்கோ வளர்ச்சிக்கோ தடையல்ல என்பதை மீண்டும் நிரூபிக்கிறது.



