
கோலாலம்பூர், ஏப் 9 – ஜாலான் பங்சாரில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட நோன்பு பெருநாள் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது கண்டறியப்பட்டதை தொடர்ந்து , 28 வயதான ஆடவர் ஓட்டிவந்த லம்போர்கினி அவென்டடோர் காரை சாலைப் போக்குவரத்துத் துறை
பறிமுதல் செய்தது.
கெப்போங்கில் ஒரு துரித உணவகத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட சீன நாட்டவர் தனது காதலியுடன் டாமன்சாரா ஹைட்ஸில் உள்ள தனது வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது அக்கார் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நடவடிக்கையின்போது மொத்தம் 1,627 கார்கள் பரிசோதிக்கப்பட்டதில் அந்த லம்போர்கினி கார் உட்பட 27 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூட்டரசு பிரதேச சாலை போக்குவவரத்துத்துறை இயக்குனர் ஹமிடி அடாம் ( Hamidi Adam ) தெரிவித்தார்.
உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, சாலை வரி, காப்பீடு இன்றி வாகனம் ஓட்டியது மற்றும் வாகனங்களை மாற்றியமைத்தது போன்ற பல்வேறு குற்றங்களுக்காக 463 குற்றப் பதிவுகள் வழங்கப்பட்டதாக அவர் கூறினார். இந்த சோதனை நடவடிக்கையில் சாலை போக்குவரத்துத்துறை , போலீஸ் , குடிநுழைத்துறை மற்றும் தேசிய போதைப் பொருள் எதிர்ப்பு நிறுவனத்தின் அதிகாரிகள் உட்பட 115 பேர் பங்கேற்றனர்.
போலீஸ் அதிகாரிகள் 60 வாகனங்களை பரிசோதனை செய்து 30 சம்மன்களை வழங்கினர். அதே நேரத்தில் குடிநுழைவுத்துறை 29 வெளிநாட்டினரைச் சோதனை செய்து ஒரு ஆண் மற்றும் இரண்டு இந்தோனேசியப் பெண்களையும் கைது செய்னர்.
இதனிடையே மார்ச் 24 ஆம்தேதி தொடங்கி நேற்று முடிவுற்ற நோன்பு பெருநாள் சிறப்பு நடவடிக்கையின்போது போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 4,559 சம்மன்களை சாலை போக்குவரத்துத்துறை விநியோகித்ததாக ஹமிடி தெரிவித்தார்.