
கோலாலம்பூர், மே 21 – தங்களது ஒன் லைன் இணைய சேவையை
ஊடுருவிய ஹேக்கர்கள் 55 மில்லியன் அமெரிக்க டாலர் அல்லது அதற்கு இணையான 236.17 மில்லியன் ரிங்கிட் பிணைப்பணம் கோரியதாக கூறப்படுவதை கோலாலம்பூர் மாநகர் மன்றமான DBKL மறுத்துள்ளது. இதற்கு முன் DBKLலின் ஒன்லைன் சேவையில் தொழிற்நுட்ப பிரச்னை இருந்தபோதிலும் பிணைப்பணம் தொடர்பான பிரச்னை எதுவும் எழவில்லையென கோலாலம்பூர் டத்தோ பண்டார் டத்தோஸ்ரீ டாக்டர் மைமூனா முகமட் ஷாரிப்
( Maimunah Mohd Sharif ) தெரிவித்தார். இணைய சேவையில் தொந்தரவு இருந்தபோதிலும் அதன் தொடர்பில் எவரும் பிணைப்பணம் கோரவில்லை. பிரச்னைக்குரிய 39 ஒன்லைன் சேவைகள் மே 1ஆம் தேதி முதல் வழக்க நிலைக்கு திரும்பிவிட்டன. அவற்றில் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் மின் வீடமைப்பு பிரிவு, மின் உரிமம், மின் புகார் பிரிவு ஆகிய சேவைகளும் அடங்கும் என அவர் கூறினார்.
இதனிடையே ஹேக்கர்கள் பிணைப்பணம் கோரியது தொடர்பில்
தங்களது தரப்பு எந்தவொரு புகாரையும் பெறவில்லையென கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா
( Datuk Rusdi Mohd Isa ) தெரிவித்தார். முன்னதாக, DBKL இன் ஆன்லைன் சேவை அமைப்பு ஹேக் செய்யப்பட்டதாகவும், ஹேக்கர்கள் 236.17 மில்லியன் ரிங்கிட் தொகையை கோரியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியதாக சீன மொழி தினசரி ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.