
ஈப்போ, ஜூன்-30 – ஈப்போ, ஜெலாப்பாங் அருகே PLUS நெடுஞ்சாலையின் 265-ஆவது கிலோ மீட்டரில் வெடிகுண்டு என சந்தேகிக்கப்படும் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதால், சுமார் 15 கிலோ மீட்டருக்கு போக்குவரத்து நிலைக்குத்தியது.
பாதுகாப்பு நடவடிக்கையாக குவாலா கங்சார் – ஈப்போ வழித்தடம் தற்காலிகமாக மூடப்பட்டதாக, PLUS அதன் X தளத்தில் தெரிவித்தது.
காலை 9.30 மணிக்கு வழக்கமான நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியின் போது ஒரு மேற்பார்வையாளரின் கண்களுக்கு அந்த ‘வெடிகுண்டு’ தென்பட்டுள்ளது.
உடனடியாக PLUS நெடுஞ்சாலை ரோந்து குழுவுக்கு அவர் தகவல் தெரிவிக்க, பின்னர் போலீஸ் தொடர்புகொள்ளப்பட்டது.
வெடிகுண்டு ஒழிப்பு நிபுணர்கள் சம்பவ இடம் வரவழைக்கப்பட்டு, பரிசோதனைகளும் உரியத் தடுப்பு நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட்டன.
நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, சாலை மீண்டும் போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்டது.