
கோலாலம்பூர், ஜூன்-29,புக்கிட் அமான் போலீஸ் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஸ்ரீ மொஹமட் ஷுஹாய்லி மொஹமட் சேய்ன், ஜூலை 1 முதல் AKPS எனப்படும் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்புத் துறையின் தலைமை இயக்குநராக பணியிடம் மாறிச் செல்கிறார்.
அவர் விட்டுச் செல்லும் பொறுப்பை, ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ எம். குமார் நிரப்பவிருப்பதாகக் அறியப்படுகிறது.
ஷுஹாய்லி ஈராண்டுகளுக்கு புதிய பொறுப்பில் இருப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
2023 ஆகஸ்ட் முதல் புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநராக அவர் பதவி வகித்து வந்தார்.
பணியில் மிகுந்த கண்டிப்புக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவரான ஷுஹாய்லி, அரச மலேசியப் போலீஸ் படை மட்டுமின்றி பொது மக்கள் மத்தியிலும் பிரபலமாகத் திகழ்ந்தார்.
KLIA விமான நிலையப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் அவரின் அனுபவம் மிகவும் கைக்கொடுக்கும் என நம்பப்படுகிறது.
புதிய போலிஸ்படை தலைவராக Datuk Seri Mohd Khalid Ismail பதவியேற்றப் பிறகு இந்த மாற்றங்கள் வந்துள்ளன.
மேற்கண்ட இருவரும் தத்தம் நியமன உத்தரவுக் கடிதங்களைப் பெற்றிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதுவரை ஷுஹாய்லி மட்டுமே தனது பணியிட மாற்றத்தை பெரித்தா ஹரியானிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
மற்றவை, திங்கட்கிழமை நடைபெறும் பதவி ஒப்படைப்புச் சடங்கில் தெரியுமென அவர் சுருக்கமாகக் கூறினார்.
டத்தோ எம். குமார் புக்கிட் அமானில் தலைமையேற்றால், அண்மைய காலத்தில் அரச மலேசியப் போலீஸ் படையில் ஆக முக்கிய பதவிகளில் ஒன்றில் அமரும் இந்தியராக அவர் திகழ்வார்.
கடந்தாண்டு ஜனவரியில் ஜோகூர் போலீஸ் தலைவராகப் பொறுப்பேற்ற டத்தோ குமார், இந்த ஒன்றரை ஆண்டுகளில் அம்மாநிலத்தில் குற்றச்செயல் துடைத்தொழிப்பில் தீவிரம் காட்டி, மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதில் பெரும் பங்காற்றியுள்ளார்.
போலீஸ் படை மட்டுமின்றி எல்லா இன மக்கள் மத்தியிலும் அவர் நன்மதிப்புடன் வலம் வருவது குறிப்பிடத்தக்கது.