
ஸ்ரீ கெம்பாங்கான், ஏப்ரல்-13,ஸ்ரீ கெம்பாங்கானில் செயல்பட்டு வந்த சட்டவிரோத Call Centre மையத்தை அதிரடியாகச் சோதனையிட்ட போலீஸார், 9 பேரைக் கைதுச் செய்துள்ளனர்.
அவர்களில் 5 ஆண்களும் 4 பெண்களும் அடங்குவர் என, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ Shazeli Kahar, இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இக்கும்பல், சொகுசு வீட்டொன்றில் இரகசியமாக இந்த மையத்தை நடத்தி வந்துள்ளது; குறிப்பாக ஜப்பானியப் பிரஜைகளைக் குறிவைத்து அதிக இலாபம் தரும் வேலைவாய்ப்பு இருப்பதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளது.
ஏப்ரல் 8-ஆம் தேதி நடத்தப்பட்ட அச்சோதனையில், மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட மடிக்கணினிகள், ஏராளமான கைப்பேசிகள் மற்றும் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த மையம் கடந்த சில மாதங்களாகச் செயல்பட்டு வந்ததும், சமூக வலைத்தளங்கள் மூலம் வெளிநாட்டவர்களைத் தொடர்பு கொண்டு ஏமாற்றியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனிடையே, காஜாங்கில் 3 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் இணைய சூதாட்டம் தொடர்பில் 12 பேர் கைதான வேளை, பெட்டாலிங் ஜெயா, கம்போங் துங்கு, 7 வெளிநாட்டவர்கள் உட்பட 8 ஆடவர்கள் கைதாகினர்.



