
கோலாலம்பூர், மே-28 – விவசாயப் நோக்கத்திற்காக கிள்ளான் வட துறைமுகம் வாயிலாக, 20 ட்ரோன்களைக் கடத்திக் கொண்டு வரும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
அவற்றின் மதிப்பு 1.56 மில்லியன் ரிங்கிட்டாகும் என, சுங்கத் துறையின் உதவித் தலைமை இயக்குநர் ரைசாம் செத்தாபா@ முஸ்தஃபா கூறினார்.
ஏப்ரல் 23-ஆம் தேதி 20 அடி அளவிலான சரக்குக் கொள்கலன் அங்கு தடுத்து வைக்கப்பட்ட போது, அந்தக் கடத்தல் முயற்சி அம்பலமானது.
ஆசிய நாட்டொன்றிலிருந்து ‘சமையலறைத் துண்டு’ என்ற பெயரில் உள்ளூர் சந்தைக்காகக் இந்த ட்ரோன்கள் கடத்திக் கொண்டு வரப்பட்டுள்ளன.
ட்ரோன் போன்ற மின்னியல் பொருட்களின் இறக்குமதிக்கு, மலேசியாவின் தரநிலை மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனமான SIRIM-மின் அனுமதி பெறப்பட வேண்டும் என்பதை ரைசாம் சுட்டிக் காட்டினார்.
இதனிடையே, அதே துறைமுகத்தில் மே 7-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனையில், வரி செலுத்தாத 21,351 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
‘தளவாடப் பொருட்கள்’ என்ற பெயரில் ஏமாற்றி கடத்தி வரப்பட்ட அவற்றின் மதிப்பு 2.81 மில்லியன் ரிங்கிட்டாகும்.
மேற்கண்ட 2 சம்பவங்களும் 1967-ஆம் ஆண்டு சுங்க சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகின்றன.