10 மலேசியத் தன்னார்வலர்கள் கைது; Flotilla மனிதநேய உதவிக் குழு மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அன்வார் கடும் கண்டனம்

புத்ராஜெயா, அக்டோபர்-2,
ஆயுதங்கள் எதுவும் இல்லாமல், காசா நோக்கி மனிதநேய உதவிகளை எடுத்துச் சென்ற Global Sumud Flotilla கப்பல்களை இஸ்ரேல் தடுத்துள்ளதை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹீம் கடுமையாக கண்டித்துள்ளார்.
மலேசியர்கள் உட்பட பன்னாட்டு தன்னார்வலர்களை ஏற்றிச் சென்ற அக்கப்பல்கள், “ஒருமைப்பாடு, கருணை மற்றும் நம்பிக்கையின் சின்னமாகும்.
ஆனால் அது தேவையின்றி அச்சுறுத்தலையும் வலுக்கட்டாயத்தையும் எதிர்கொண்டுள்ளது.
இப்படி மனிதநேய பணிகளைத் தடுப்பதன் மூலம், இஸ்ரேல் உலக மக்களின் உணர்வுகளையும் பாலஸ்தீன மக்களின் உரிமைகளையும் புறக்கணித்துள்ளது என அன்வார் சாடினர்.
குறிப்பாக, மலேசியர்களின் பாதுகாப்பும் கண்ணியமும் மிக முக்கியம் என்றும், அதை மீற இஸ்ரேலை அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் உறுதி அளித்தார்.
முன்னதாக மத்தியதரைக் கடலில் இஸ்ரேல் படைகள் Flotilla கப்பல்களை முற்றுகையிட்ட பிறகு, அவற்றிலிருந்த 23 மலேசியர்களில் 17 பேருடன் தொடர்பை இழந்ததாக, Sumud Nusantara கட்டுப்பாட்டு மையம் கூறியது.
உள்ளுர் பாடகி Zizi Kirana உட்பட குறைந்தது 10 மலேசியத் தன்னார்வலர்கள் இதுவரை கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
மற்றவர்களின் நிலை இன்னும் தெரியவில்லை.
கப்பல்களைத் தடுத்து நிறுத்தும்போது இஸ்ரேலிய இராணுவம், நீர் பீரங்கித் தாக்குதல் உள்ளிட்ட ஆக்ரோஷமான நடவடிக்கையைப் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், கப்பலில் இருந்த அனைத்து பயணிகளுக்கும் இதுவரை எந்த காயமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Flotilla கப்பல்களும் அவற்றிலிருந்தவர்களும் இஸ்ரேல் துறைமுகத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டதை, இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியது.