
கோலாலாம்பூர், ஏப்ரல்-2 – சிலாங்கூர், செலாயாங்கில் 10 ஆண்டுகளாக நடந்ததாகக் கூறப்படும் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் சம்பவம், நாட்டையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தாமான் செலாயாங் பெர்மாத்தாவில் பதிவுச் செய்யப்படாத குழந்தைகள் காப்பகத்தில், 10 முதல் 17 வயதுக்குள் உள்ள சிறுவர்கள் நீண்டகாலமாக துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அங்குத் தங்கியிருந்து அண்மையில் 18 வயதை அடைந்த இரு முன்னாள் குடியிருப்பாளர்கள், அரசு சார்பற்ற அமைப்புக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, இந்த கொடூரம் அம்பலமானது.
“பல ஆண்டுகளாக உள்ளுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருந்தவர்கள், கடைசியில் அங்கிருந்து வெளியானதும் அனைத்தையும் வெளியில் கொட்டினர்; அதை கேட்க கேட்க நெஞ்சே பதறியது” என Pertubuhan Kebangkitan Tiga Tangan Selangor என்ற NGO தலைவர் எஸ். மாறன் கூறியதாக NST செய்தி வெளியிட்டுள்ளது.
போலீஸார் விசாரணை மேற்கொண்டு, காப்பகத்தின் 31 வயது நிர்வாகி உட்பட 4 பேரைக் கைதுச் செய்துள்ளனர்.
அங்கு தங்கியுள்ள 17 வயது பையனும் அவர்களில் அடங்குவார்.
விசாரணைக்காக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை புக்கிட் அமான் போலீஸ் உறுதிப்படுத்தியது.
13 பெண்கள் உட்பட 36 குழந்தைகள் வசிக்கும் அந்தக் காப்பகத்தில், மருத்துவ பரிசோதனையில் பல சிறுவர்கள் அண்மைய மற்றும் பழைய காயங்களுடன் இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.



