
செப்பாங், மே-18- 10 ஆண்டுகளாக மலேசியாவிலிருந்த Fu Wa மற்றும் Feng Yi இராட்சத பாண்டா கரடிகள் இன்று தாயகம் புறப்பட்டன.
2014-ஆம் ஆண்டு மலேசியா – சீனா இடையில் கையெழுத்தான இராட்சத பாண்டா கரடிகள் புனர்வாழ்வு திட்டத்தின் கீழ், இந்த பாண்டா ஜோடி இது நாள் வரை இங்கு பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று காலை 6.30 மணிக்கு Zoo Negara-விலிருந்து கிளம்பிய அவையிரண்டுக்கும், செப்பாங் KLIA விமான நிலையத்தின் விலங்குகள் ஹோட்டலில் வழியனுப்பு விழா நடைபெற்றது.
இயற்கை வளம் மற்றும் சுற்றுச் சூழல் நிலைத்தன்மைக்கான அமைச்சின் தலைமைச் செயலாளர், PERHILITAN எனப்படும் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையின் தலைமை இயக்குநர் இருவரும் பாண்டா கரடிகளை வழியனுப்பி வைத்தனர்.
காலை 11 மணிக்குத் தாயகம் புறப்பட்ட Fu Wa & Feng Yi இரண்டும் சீனாவில் இனி ‘ஓய்வுக் காலத்தை’ கழிக்கும்.
இந்த பாண்டா ஜோடிக்குப் பிறந்த 3 குட்டிகளும் ஏற்கனவே சீனாவுக்கு அனுப்பப்பட்டு விட்டன.
மலேசியா – சீனா இடையிலான அரச தந்திர உறவின் நாற்பதாம் நிறைவாண்டின் அடையாளமாக, 2014-ஆம் ஆண்டு மலேசியா வந்த Fu Wa & Feng Yi ஜோடி, இரு வழி உறவை மட்டும் வலுவாக்கவில்லை.
மாறாக, அழிந்து வரும் விலங்கினங்களின் புனர்வாழ்வின் அவசியம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த உதவின.